கோலாலம்பூர், ஜூன் 7 -
கெடா மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நோரிடமிருந்து காவல் துறை இன்று முழு வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
பினாங்கு மாநிலம் கெடாவிற்குச் சொந்தம் எனும் அறிக்கையை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பிய அந்த மாநில பாஸ் கட்சித் தலைவர் மீது புக்கிட் அமானைச் சேர்ந்த சிறப்புக் குற்றவியல் விசாரணை குழு (USJT D5) விசாரணையை மேற்கொண்டது.
அவ்வகையில் இன்று காலை விசாரணை அதிகாரி சனுசியை அவரது மந்திரி புசார் அலுவலகத்தில் சந்தித்து அவரிடம் முழு வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
அரச மலேசிய காவல் படையின் செயலாளர் துணை ஆணையர் நூர்சிய முகமட் சாடுடின் இங்குள்ள புக்கிட் அமானில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
தற்போது, சம்பந்தப்பட்ட விசாரணைக் குழு முழு விசாரணை அறிக்கையை முடித்து தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நூர்சியா மேலும் கூறினார்.
முழுமைபெற்ற விசாரணை அறிக்கை அரசின் தலைமை சட்டத்துறை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார் அவர்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள பிரிவு 145(3) இல் குறிப்பிடபட்டுள்ளதுபோல வெகு விரைவில் முழு விசாரணை அறிக்கை சட்ட அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks