ஜார்ஜ்டவுன், ஜூன் 8 -
பினாங்கு மாநில சட்டமன்றம் எதிர்வரும் ஜூன் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டு 15ஆவது மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு வழி விடப்படும் என்று மாநில முதல்வர் சோவ் கொன் யியோவ் இன்று கூறினார்.
வெகு விரைவில் மாநில ஆளுநர் துன் அகமட் பூஜி அப்துல் ரசாக்கைச் சந்தித்து இவ்விவகாரம் ஒப்படைக்கப்படும் என்றார்.
இம்மாதம் 28ஆம் தேதி சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். நான் விரைவில் இதனை முன்மொழிவதற்காக மேன்மை தங்கிய ஆளுநரை நேரில் சந்தித்து பேச விருக்கிறேன் என்று கொன் யியோவ் உறுதிபடுத்தினார்.
சட்டமன்ற கலைக்கப்படும் சரியான நாள் குறித்து ஊடக நிருபர்கள் வினவியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதற்கு முன், மாநில சட்டமன்றம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் கலைக்கப்படும் என்று கொன் யியோவ் கோடி காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15ஆம் பொதுத் தேர்தலுக்காக நாடளுமன்றம் கலைக்கப்பட்டபோது ஆறு மாநிலங்களான கெடா, பினாங்கு, கிளந்தான், திரங்காணு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் சட்டமன்றங்கள் கலைக்கப்படவில்லை.
ஒரு தவணைக்கான 5 ஆண்டுகள் ஆட்சிக்காலம் முழுமைபெறும் வேளையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு மாநிலத்தேர்தல் நடைபெற வேண்டியது அவசியம் என்று தேர்தல் சட்டம் குறிப்பிடுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks