கோலாலம்பூர், மே 26 -
மலேசியாவில் ஐந்தாம் தலைமுறைத் தொலைத் தொடர்புக் கட்டமைப்புக்கு மாறும் திட்டத்தால் அரசாங்கத்திற்கு நிதித் தாக்கங்கள் பெருமளவில் குறையும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
நிதியமைச்சருமான அவர், நாடாளுமன்றத்தில் நேற்று அவ்வாறு கூறினார். தற்போது ஒரு தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திவரும் நிலையில் இருந்து இரண்டு கட்டமைப்புகளுக்கு மாறும் நடவடிக்கை குறித்து அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
அதனால் இழப்புகள் ஏற்படுமா என்றும் பயனாளர்கள் அதிகத் தொகை செலுத்த வேண்டியிருக்குமா என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கையில் பிரதமர் அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்பின் நலன் கருதி தமது அமைச்சரவை இரண்டு கட்டமைப்புகளுக்கு மாறுவதன் தொடர்பில் முடிவு எடுத்ததாக திரு அன்வார் கூறினார்.
அந்நடவடிக்கைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிதி வழங்கும். பயனாளர்களுக்கு அவை குறைவான விலையில் சேவை வழங்கும்.
எந்தத் துறையிலும் போட்டித்தன்மையை ஊக்குவித்தால் பயனாளர்களுக்குச் செலவு குறையும் என்பதை திரு அன்வார் சுட்டினார்.
முன்னதாக, இரண்டு கட்டமைப்புகளுக்கு மாறுவதால் தொலைத் தொடர்பு நிறுவனங்களோ பயனாளர்களோ இணையச் சேவைக்கு அதிகத் தொகை செலுத்த நேரிடாதென்று தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks