மூன்று விதமான ஊடுகதிர்களை ஒன்றினைத்து நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் மிகத் துல்லியமான சுகாதார நிலவரத்தை எடுத்துக் காட்டும் அதிநவீன புற்று நோயியல் கதிரியக்க சிகிச்சை மையத்தை தாம்சன் மருத்துவமனை கொண்டிருக்கிறது.
மருத்துவ உலகில் புது வரவான இம்மையத்தை, கடந்த ஞாயிறன்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். நாட்டில் இத்தகைய நவீன கதிரியக்க சிகிச்சை பிரிவை நிறுவியுள்ள முதலாவது சுகாதார மையமான தாம்சன் மருத்துவமனை நிர்வாகத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
திறப்புரையின் போது அவர் பேசுகையில், புற்று நோயாளிகளை உடல், உணர்வு மற்றும் மன ரீதியாக திடப்படுத்துவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்ற அரசு சார்பற்ற இயக்கங்களான மக்னா, மார்பக புற்றுநோய் நல சங்கம், தேசிய புற்றுநோய் சங்கம் ஆகியவற்றுக்கு நாம் அனைவரும் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், மக்கள் ஆரோக்கியமான, தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் துறை சார்ந்த அமைப்புகளும் தொடர்ந்து நன்முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks